Wednesday, May 25, 2005

சந்தனமேடை எம் இதயத்திலே...2


இந்தக்காலகட்டத்திலே வெளிவந்த இலங்கைப்பாடல்கள், ஒன்று துள்ளிசைப்பாடல்களாக இருந்தன அல்லது மெல்லிசைப்பாடல்களாக இருந்தன. இலங்கைத்தமிழர் வேண்டிக் கேட்ட மூன்றாவது வகைப்பாடல்கள், பக்திப்பாடல்கள். அவற்றின் சில, பக்திப்பாடல்கள் என்பதற்கப்பாலும் பிரசித்தி பெற்றவை. அவற்றிலே ஒன்று. இணுவில் வீரமணி ஐயர் யாத்து, டி. எம். சௌந்தரராஜன் பாடிய, "கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தே." புலம்பெயர்ந்தவர்களின் அடுத்த தலைமுறைகளின் சங்கீத, நடன அரங்கேற்றங்களிலே இது பொதுவிலே புகுந்துவிடும். வீரமணி ஐயரின் இந்தப்பாட்டு 70~80 களிலே வெளிவந்ததா என்று தெரியாது. அநேகமாக, 77 இன் பின் ஜே ஆர். ஐயவர்த்தனா ஆட்சியின் திறந்த பொருளாதார ஆரம்பத்தின்போது, தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கோவில்களின் திருவிழாக்களுக்கு ஆடம்பரச்செலவு செய்து, தமிழ்நாட்டுப்பாடகர்களை அழைப்பது வழக்கமானபோது, உருவாகியிருக்கலாம். இப்படியாக, சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அம்மன் பாடல்களும் இருக்கின்றன. அந்த வரிசையிலே, "கோணேஸ்வரம் எனக்கு இராமேஸ்வரம்" என்ற பாடலுமிருந்தது. நிச்சயமாக, அகதியாகப் படகிலேறி ஓடி "இராமேஸ்வரம் எனக்குக் கோணேஸ்வரம்" என்று பாடும் நிலை வர முன்னாலே வந்த பாடல் இது.

இந்த ஈழத்துப்பாடல்கள் எனப்படும் மெல்லிசைப்பாடல்களை அவை இலங்கை வானொலியிலே தினமும் ஒலிபரப்பாகி நான் கேட்டிருக்கக்கூடிய என் பாடசாலைக்காலத்திலே விரும்பிக்கேட்கும் ஆர்வம் இருக்கவில்லை; அவை ஒலிபரப்பான, காலைச்செய்திக்கும் பொங்கும் பூம்புனலுக்கும் இடைப்பட பதினைந்து நிமிடங்களிலே காலை வகுப்பு-கோயில்-சாப்பாடு-பள்ளிக்கூடம் என்று ஓடும் நிலை இருந்தது மட்டும் காரணமல்ல; எல்லோரையும்போல தமிழ்த்திரைப்படப்பாடல்களின்மீது ஆர்வம் கவிந்திருந்ததுதான் முக்கியமாகும். ஆனால், இலங்கைப்பாடல்கள், ஒரு காலகட்டத்திலே வானொலியிலும் மக்களிடையேயும் இளையராஜாவினை ஒற்றியெடுத்த மோஹன்ராஜ்-ரங்கன் போன்ற இளம் இலங்கை இசையமைப்பாளர்களினாலே (மோஹன்ராஜின் தந்தை ரொக்சாமி எனப்படும் முத்துச்சாமி, முதன்முதலிலே, திருவனந்தபுரத்துக்கு அருகிலேயிருந்து, இலங்கையின் முதற்படத்துக்கு இசையமைப்பதிலே உதவ வந்து, இலங்கையிலேயே தங்கி இசையமைப்பாளர் ஆகிவிட்டவர். வி. பி. கணேசனின் படங்களுக்கும் அவர்தான் இசையமைப்பாளர் என நினைக்கிறேன்) முழுக்க முழுக்கத் கோடம்பாக்கத்திரைப்படப்பாடல்களின் பதிவாகப் போனப்பிறகு, பழைய ஈழத்துப்பாடல்களிலே எண்பதின் பிற்பகுதியிலே ஒரு பிடித்தமுருவானது. சிலவேளை கடந்த காலத்திற்குரியதைப் பிடித்துக்கொள்வதால், அந்தக்காலத்தினை இரைமீட்டக்கூடிய ஓர் உளப்பாங்குதான் இதன் காரணமோ தெரியாது.

ஆனால், இப்பாடல்களிலே ஈடுபாடு உண்டான காலத்திலே அவற்றினைக் கேட்பதிலே சிக்கலுமிருந்தது; இப்படியாகப் பிடித்துப்போன, ஈழத்துப்பாடல்களை ஓர் இசைநாடாவாகவோ அல்லது இசைவட்டாகவோ பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஒன்று இப்பாடல்கள் வானொலியிலே ஒலிபரப்பாகும்போது, ஒலிநாடாவிலே பதியவேண்டும்; அல்லது, இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திலே யாரிடமாவது தொகுதியாகப் பெறவேண்டும். முதலாவது முறைப்படி, பாடலைப் பதியும்போது, பதிவுற்றதிலே விரும்பின பாடலைவிட மீதி அத்தனை சுற்றுப்புறச்சத்தங்களும் பதிந்ததால், வெறுத்துப்போனது; இரண்டாவது முறையிலே பெற வானொலிக்கூட்டுத்தாபனத்துக்குப் போனால், நாடிருந்த நிலையிலே வெலிக்கடை, பூஸா இராணுவமுகாங்களிலே கொண்டுபோய் அடைக்கப்படுவதுதான் குறைந்தபட்சத்தண்டனையாக இருக்கலாம் என்னுமாப்போன்ற நிலையிருந்தது.. ஆகவே, விரும்பிய பாடல்கள் கைவரப்பட முடியவில்லை. (இப்போது, இணையத்திலேகூட இவற்றிலே ஒரு பாடலையுங்கூடக் காணமுடியவில்லை.)

என்னைப் பொறுத்தமட்டிலே, ஈழத்துப்பாடல்கள் திருகோணமலையின் பரமேஸ்-கோணேஸ் சகோதரர்களுடன் ஆரம்பமாகின்றது. 1974 இலோ 1975 இலோ இவர்கள் தமது பாடல்களை ஒரு பாட்டுப்புத்தகமாக பெரிய அளவிலே வெளியிட்டார்கள்; ஆண்டு சரியாக ஞாபகமில்லை. இலங்கையின் துள்ளிசைப்பாடல்களும் அப்படியாக பாடற்புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. தமிழ்த்திரைப்படப்பாடற்புத்தங்கள் போல ஒரு படத்தின் பாடல்களும் அப்படக்காட்சிகள் அட்டையிலும் திரைக்கதைச்சுருக்கமும் "மீதி வெள்ளைத்திரையிலே காண்க" தொக்குநிற்றலுமில்லாமல், ஒரு தொகுப்பாக வந்திருந்தது. இதை எங்கள் வீதியும் + பரமேஸ்-கோணேஸ் ஆகியோரின் வீட்டுவீதியும் சந்திக்குமிடத்திலே அப்போதிருந்த வாணி புத்தகசாலையிலே காசு அங்குமிங்குமாகச் சேர்த்து வாங்கியிருந்தேன். பொதுவாக, பெண் குரலுக்கு, கோணேஸின் மனைவி, மாலினிதான் குரல் கொடுப்பாரென்று ஞாபகம். ஆனால், 1977~1979 இலே பரமேஸ்-கோணேஸ் இருவருக்கிடையிலும் பிளவு ஏற்பட்டு, அப்படியே இருவரும் வேறு வேறு திசைகளிலே போய்விட்டார்கள். நாங்கள் ஒரு நாள் தனியார் வகுப்பு முடிந்து வரும்போது, இசைக்கருவிகள் உடைபட்டு அவர்கள் வீட்டுவாசலிலே இருக்க, சண்டை நிகழ்வதைக் கண்டோம். அநியாயமான பிளவு அது. தற்போது, பரமேஸ் எங்கிருக்கின்றாரென்று தெரியவில்லை. ஆனால், கோணேஸ், கனடாவின் ITBC வானொலியினை நடத்திக்கொண்டிருப்பதாக இணையத்தினூடாக வாசித்தேன். பின்னால், இவர்களுடனிருந்த பஞ்சாட்சரம் போன்றோர் திருகோணமலையிலே மெல்லிசைக்குழுக்களை நடத்திக்கொண்டிருந்தாலுங்கூட, இவர்களினைப் போல, சுயமும் திறமையும் கொண்டிருக்கவில்லையென்றே கருதுகின்றேன். இக்காலகட்டத்திலே இக்குழுக்களிலே ரோபல் ராகல், தற்போது பொஸ்ரனிலே வதியும் லோகேஸ்வரன் போன்றோர் மெல்லிசைப்பாடகர்களாகவும் இருந்தார்கள்.

பரமேஸ், கோணேஸ் சகோதரர்களின் பாடல்கள், தமிழ்நாட்டின் ஏ. எம். ராஜா, ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் முணுமுணுக்கும் குரல்களின் பாணியை ஒத்தும் சற்றே துள்ளிசைப்பாடல்களின் வேரினைக்கொண்டும் அமைந்த பாடல்களெனச் சொல்லலாம். துள்ளிசைப்பாடல்களின் ஆரம்பகாலச்சாயல் எனும்போது, பைலா வகையான பாடற்சாயல் கொண்டவை அல்ல; பைலா பாடல்களின் தாக்கமில்லாதவை என்றே கேட்கும்போது தோன்றுகிறது.

இவர்களின் பாடல்கள் என நான் எண்ணிக்கொண்ட பாடல்கள் (சிலவறறினை நிச்சயமாக இவர்களுடையதா எனச் சொல்லமுடியவில்லை)

1. உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது?
2. தங்கமேனி கன்னம் தாமரைப்பூ
3. என் ராஜா இது நியாயந்தானா? (தேனாடும் பூவில் தானாடும் வண்டு)
4. அழைக்கும் ஓசை கேக்கவில்லையா?
5. நீ வாழுமிடமெங்கே? எந்தன் பார்வை விழும் அங்கே
6. முத்துக்கிண்ணக் கன்னத்திமேல் பத்துப்பத்து முத்தங்கள்
7. நீ இன்றி நிலவு ஏன் வந்ததிங்கு?
8. பாடல் எனக்கிது முதற்றரந்தான்
9. போகாதே தூரப் போகாதே; தாங்காதே நெஞ்சம் தாங்காதே
10. சந்திப்போம் சந்திப்போம் சந்திப்போம் சந்திப்போம்
11. அன்று தேடினேன்; இன்று பாடினேன்
12. மனமாளிகை ரோஜா! மணம் வீசுது இலேசா
13. கொஞ்சிக்கூவும் சிட்டே என் சேதி சொல்வாயோ?
14. நெஞ்சைத் தொட்டுப் பேச வந்த கொஞ்சும் பாவையே
15. தக்காளிப்பழத்துக்கும் தளதள உடம்புக்கும் வித்தியாசம் இல்லையடி பாப்பா (??)
16. எழுதுகிறேன் பாட்டு; இனிய தமிழ் கேட்டு

* இங்கே பரமேஸ்-கோணேஸின் பாடல்களுக்கு இணைப்பினைத் தந்திருப்பது, அவர்களின் திறமையும் சுயமும் ஈழத்துத்தமிழிசையிலே அவர்களுக்கான இடமும் பெரிதும் தெரியாமலே போய்விட்டது என்பதற்காக, அவர்களினைப் பற்றிய பதிவினை முழுமையடையச் செய்வதற்காகமட்டுமே. இப்பாடல்கள், தற்சமயம் இசைத்தட்டுகளிலே கிடைக்கின்றனவா என்பது குறித்து எனக்குத் தெரியாது. அவ்வாறு அவை அவற்றின் பாடலுரிமை பெற்றோரினாலே விற்பனைக்கு இப்போது கிடைக்குமென்பது தெரியவரின், இப்பாடல்களை இணையத்திலிருந்து உடனடியே நீக்கி விடுவேன். கூடவே, அவை அவ்வாறு கிடைப்பின், அவ்விசைத்தட்டு குறித்த விபரம் தருகின்றவர்களுக்கும் நன்றியுடையோனாவேன்.

'05 மே 25, புத. 03:54

Friday, May 20, 2005

சந்தனமேடை எம் இதயத்திலே... - 1

சந்தனமேடை எம் இதயத்திலே... - 1

இரண்டு கிழமைகளுக்கு முன்னோர் இரவு, ஒரு கலிப்ஸோ இசைவட்டினைக் கேட்டுக்கொண்டிருந்தேன்; மீண்டுமொரு முறை "அப்பனில்லாவிட்டால் தெரியும் அப்பன் அருமை; உப்பில்லாவிட்டால் தெரியும் உப்பின் அருமை" என்பது போல ஈழத்துப்பாடல்களின் தவனம் பிடரியிலே அடித்தது; அந்தக்காலத்திலே (1983 க்கு முன்னால்), இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திலே ஆசியசேவையை விட்டால், தமிழ்ச்சேவைகள் இரண்டு; சேவை ஒன்று, கர்நாடக சங்கீதம், சமயநிகழ்ச்சி, சமையல் நிகழ்ச்ச் போன்றவற்றினை நிரப்பிக்கொள்ளூம். சேவை இரண்டான வர்த்தகசேவையை பொதுவாகத் தமிழ்த்திரைப்படப்பாடல்களே ஏதோ விதத்திலே அடைத்துக்கொண்டிருக்கும்; சொல்லப்போனால், வார நாட்களிலே மத்தியானம், அரை மணிநேரம், ஹிந்திப்பாடல்கள் வேறு வர்த்தகசேவையிலுண்டு. இலங்கைப்பாடல்களென துள்ளிசைப்பாடல்கள் (இவை பைலாப்பாடல்களென்றும் பொப்பிசைப்பாடல்களென்றும் சுட்டப்பட்டன; Pop உம் Baila உம் வேவ்வேறு வகையென உணர்ந்தறியும் தன்மை எங்களிடம் இருக்கவில்லை) கிழமைக்கு ஓரிரு தடவைகள் கால்மணிநேரம் ஒலிபரப்பாகும். ஆனால், இவற்றினை ஒரு நாளும் நாங்கள் ஈழத்துப்பாடல்கள் என்ற உணர்வோடு பார்த்ததில்லை; இன்றைய காலகட்டத்தில், ஈழத்துப்பாடல்களென்றால், ஈழவிடுதலைப்பாடல்கள் என்ற அர்த்தத்திலே நோக்கப்படலாமென்றாலுங்கூட, ஈழத்துப்பாடல்களென்று எந்த முப்பத்தைந்து வயது தாண்டிய இலங்கையரையும் கேட்டாலும், 83 இற்கு முற்பட்ட காலகட்டத்திலே, காலை செய்தியறிக்கைக்குப் பின்னாலும், பொங்கும் பூம்புனலுக்கு முன்னாலும், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் வர்த்தகசேவையிலே ஒலிபரப்பான, இலங்கையிலே இசையமைக்கப்பட்டு, இலங்கையராலே பாடப்பட்ட துள்ளிசையல்லாத தமிழ்மெல்லிசைப்பாடல்கள் என்றுதான் சொல்லக்கூடும். இரண்டு கிழமைகளுக்கு முன்னான இரவிலே இல்லாத என் அப்பனும் உப்புமானவை இவ்வகைப்பாடல்களே.

முன் & மத்திய எழுபதுகளின் ஸ்ரீமாவின் அரசு, அன்றைய சீன அரசினை அடியொற்றி நடக்க முயன்ற அரசு; சுய உற்பத்தி முன்னிலைப்படுத்தப்பட்டு, இறக்குமதி கிட்டத்தட்ட இல்லாத நிலை என்றே சொல்லலாம்; பிள்ளைக்குப் பால்மா தொடக்கம், பார்ப்பதற்குப் படம்வரைக்கும் உள்ளூரிலேயே பண்ணிக்கொள் என்பதான சூழல். தமிழ்நாட்டுப்பத்திரிகை தொடக்கம் படம் வரைக்கும் இந்த இறக்குமதித்தடை இருந்தது. (இந்தப்புத்தகத்தடையைத்தான் ஜெயமோகன் சில மாதங்களுக்கு முன்னால், வ. அ. இராசரத்தினம் பற்றிய பதிவுகள் தளக்குறிப்பினை ஒட்டி எழுதிய உயிர்மைக்குறிப்பிலே, ஒரு திரிபு திரித்து, "தமிழ்நாட்டு இலக்கியங்களை வேண்டுமென்றே தடை செய்தார்கள்" என்பதான தொனி விழ எழுதினார். அப்படியாக இந்தியாவினைக் குறிவைத்தேதும் தடை செய்யவில்லை என்று பதிவுகள் விவாதக்களத்திலே, எழுதியதை அவர் ஏற்றுக்கொள்ளாமல், "நான் உன்னோடு பேசவிரும்பவில்லை" என்று முகத்திலே அடித்துச்சொல்லிவிட்டுப்போனார். "இந்தியாவிலே அச்சடிக்கப்படும் வேற்றுநாட்டவரின் புத்தகங்கள் அல்லாத, இலங்கைத்தமிழ்ப்புத்தகங்களையோ அல்லது வேறு நாட்டிலே அச்சடிக்கப்பட்ட எந்த மொழிப்புத்தகத்தினையோ இன்றைக்கும் இறக்குமதி செய்ய அரசு சம்மதிக்குமா?" என்று அவரிடம் கேட்கவேண்டுமென்பதென் அவா.). இப்படியான நேரத்திலே, தன்னிறைவு நோக்கி, தமிழ்நூல்கள், தமிழ்ச்சஞ்சிகைகள், தமிழ்ப்பாடல்கள், தமிழ்த்திரைப்படங்கள் ஆகியன வெளிவர முயற்சித்தன.

பதிப்புலகில், அம்புலிமாமாவினை ஒற்றாத குறையாக நட்சத்திரமாமா சிறுவர்க்கு வெளிவந்தது; வீரகேசரிப்பதிப்பகம் மண்ணின் மணம் வீசும் நூல்களை வெளியிட்டது. அருள்சுப்பிரமணியம் (பின்னாலே, ஆனந்தவிகடன் மர்மநாவல் போட்டியிலே வென்று போட்டிவிதிகளை மீறியதற்காக, விலத்தப்பட்ட "அக்கரைகள் பச்சையில்லை"), அருளர் என்ற அருட்பிரகாசம் (M.I.A. வின் தந்தை; விடுதலைப்புலிகளை முன்னிறுத்தாத, விடுதலைப்புரட்சியாளர்களை முன்னிறுத்த விரும்பிய ஈழவிடுதலையின் அவசியத்தினைச் சுட்டும் "லங்காராணி"), ஞானசேகரன் ("குருதிமலை"),நந்தி, ஜோன் ராஜன் ("போடியார் மாப்பிள்ளை"), செங்கை ஆழியான் ("வாடைக்காற்று", "காட்டாறு"), பாலமனோகரன் ("நிலக்கிளி", "குமாரபுரம்"), தெளிவத்தை ஜோஸப் ஆகியோர் உட்பட பலரின் நூல்கள் வெளிவந்தன. மறுபுறம் வீரகேசரியின் பதிப்பாளர், தனது பரபரப்புப்பத்திரிகையான மித்திரனின் சார்பான 'ஜனமித்திரன்' பதிப்பகமூடாக, "பட்லி" (அதே சம்பல் பள்ளத்தாக்குக்கொள்ளைக்காரி - பாராளுமன்ற உறுப்பினர்-சூடு-சா அவரேதான்), "ஜமேலா", கோவூரின் "கோர இரவுகள்" போன்ற நூல்களையும் வெளியிட்டது; 'சிரித்திரன்' சஞ்சிகை நகைச்சுவைக்கென்றே MAD சஞ்சிகை வகையிலே வெளிவந்தாலுங்கூட, நல்ல ஆழமான படைப்புகளைத் தந்திருக்கின்றது. வாழ்க்கைநடைமுறையினைப் பகிடியாக யாழ்ப்பாணச்சுடலைப்பேய்ச்சமூகத்தினை உருவாக்கிச் செங்கை ஆழியான் எழுதிய "கொத்தியின் காதல்" அருமையான எள்ளற்படைப்பு. சின்னக்குட்டி, மிஸஸ். டாமோடிரன், மெயில்வாகனத்தார், ஸ்ரீமான் செல்லக்கிளி போன்ற அருமையான கேலிச்சித்திரப்பாத்திரங்களை சிவஞானசுந்தரம் தந்தார். இடதுசாரி எழுத்தாளர்கள், செ. யோகநாதன், செ, கணேசலிங்கன் ஆகியோரும் எழுதினார்கள். (கணேசலிங்கனின் குமரன் பதிப்பகம் இவற்றினை வெளியிட்டதா என்று ஞாபகமில்லை). தவிர, டொமினிக் ஜீவாவின் 'மல்லிகை', அ. யேசுராசா, மு. புஸ்பராஜன் ஆகியோரின் ' அலை' போன்ற இதழ்களும் வந்துகொண்டிருந்தன.

இந்தக்காலத்திலே வந்த இலங்கைத்திரைப்படங்கள் வெவ்வேறு தரங்களிலேயிருந்தன. வானொலி நாடகங்களாக வந்த கோமாளிகள், ஏமாளிகள் போன்ற "carry on boys" வகையான நகைச்சு-வை-ப்படங்களைவிட்டால், மலையகத் தொழிற்சங்க அரசியல்வாதி கணேசன் (இவருடைய மகன் தற்போதைய கொழும்பு அரசியல்வாதி மனோ கணேசன்), எம்ஜிஆர் படங்களினை அப்படியே ஆடல், பாடல், கதை, காட்சியமைப்பு ஆகியவற்றிலே ஒற்றியெடுத்து, "நான் உங்கள் தோழன்", "நாடு போற்ற வாழ்க" ஆகிய படங்களை எடுத்தார். யார் அவள் போன்ற படங்கள் ஒரு புறம். கொஞ்சம் மாற்றத்தினைக் கொண்டு வர, பொன்மணி, தென்றலும் புயலும், வாடைக்காற்று ஆகிய படங்கள் வந்தன. பொன்மணி, சிங்கள இயக்குநர், தர்மசேன பத்திராஜாவின் இயத்திலே வந்தது; பேரா. கார்த்திகேசு சிவத்தம்பி நடித்துமிருந்தார். தென்றலும் புயலும் முழுக்க முழுக்க, திருகோணமலையிலேயே வேதநாயகம் என்பவராலே, வங்கியிலே வேலைசெய்த சிவபாதவிருதயர், அமரசிங்கம் நடிக்கத் தயாரிக்கப்பட்டது. வாடைக்காற்று, நெடுந்தீவு மீனவர்களின், அங்கு காற்றுக்காலத்துக்கேற்ப வந்துபோகும் மீனவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட, செங்கை ஆழியானின் கதையை முன்வைத்து, ஏ. ஈ. மனோகரன், சந்திரகலா முதன்மைப்பாத்திரங்களிலும் இந்திரகுமார் (இவர் விண்ணிலிருந்து மண்ணுக்கு என்ற நூலை எழுதியவரென்று நினைக்கிறேன். தற்போது, இலண்டனிலே இருக்கின்றார்; டயானாவின் மரணம் பற்றியொரு நூல் எழுதினார் என்றும் அறிகிறேன்), தற்போது, இலண்டனிலே கணவர் பாலேந்திராவோடு அவைக்காற்றுக்கழகம் நாடக அமைப்பினை நடத்தும் ஆனந்தராணி, இப்போது கனடாவிலே நாடகங்கள்போடும் கே. எஸ். பாலச்சந்திரன், ஜவஹர் ஆகியோரைத் துணைப்பாத்திரங்களிலே கொண்டு வெளிவந்த படம். இலங்கைத்தமிழ்த்திரைப்படங்கள் குறித்து, தம்பிஐயா தேவதாஸின் நூல் ஒன்று வெளிவந்திருப்பதாக அறிகிறேன். இணையத்திலும் தமிழ்ப்லிம் மன்றிலே ஓவியர் மூனா இலங்கைத்தமிழ்த்திரைப்படங்கள் குறித்து நல்லதொரு வரலாற்றுப்பதிவொன்றைத் தந்திருக்கின்றார்.